Thursday, June 23, 2011

ரவி சங்கரின் வாழும் கலை


வருடம் 2004...
இடம் நாகபட்டினம்..
அந்த பயங்கரமான சுனாமி கூட்டு மரணங்களையும் பசியையும் நோயையும் தன்னோடு கொண்டுவந்து சேர்த்துவிட்டுச் சென்ற பிறகு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அங்கே வருகை புரிந்தார். அவருடைய பக்தர்கள் நாகப்பட்டினத்திற்கருகேயுள்ள அக்கரைப்பேட்டை என்ற சிற்றூரில் ஒரு கோயிலுக்கெதிரே மிகப்பெரிய நீல வெல்வெட் சோஃபா ஒன்றை அமைத்திருந்தனர். சுனாமியால் வீடுகள் அழிக்கப்பட்டு, உற்றார் உறவினர்களை இழந்து, உதவிக்கு யாருமின்றி, சோர்வும் சோகமுமாக ஸ்தம்பித்திருந்த அந்த மக்களுக்கு வாழும்கலை பற்றி போதிப்பதற்காக ரவிசங்கர் அங்கு வந்து சேர்ந்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட அவரது சொகுசுக்காரிலிருந்து ரவிசங்கர் இறங்கப்போகும் இடத்திலிருந்து சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டு ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்தன. பல சொகுசுக்கார்கள் பின்தொடர அவர் அறிவு விளக்கமளிக்கப்போகும் அந்த வெல்வட் சோபா வரை, ரவிசங்கரின் காரைக் கொண்டுவந்து நிறுத்தப்போவதாக ஏற்பாடு. ஆனால் அவர் அந்த ஊருக்குள் நுழைவதற்கு சற்றுமுன்பாக கடலில் ஒரு சிறிய கொந்தளிப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சுனாமியால் சீரழிக்கப்பட்டிருந்த அம்மக்கள் சுனாமி மீண்டும் வருவதாக கத்திக்கொண்டே கடற்கரையிலிருந்து ஓடத்தொடங்கினார்.

கட்டிட இடிபாடுகளை மும்மரமாக அகற்றிக்கொண்டிருந்த ராணுவவீரர்களும் ரவிசங்கரை வரவேற்பதற்காக காத்திருந்த நிகழ்ச்சி அமைப்பபாளர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடத் துவங்க, அங்கே ரவிசங்கர் வந்து சேர்ந்தார். தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தவர்களை நிறுத்தி என்ன விஷயமென்று விசாரித்த ரவிசங்கர் ஒருகணம் திகைத்துப்போய் நின்றார். பின் சுயபாதுகாப்புணர்வு தாக்க, காருக்குள் பாய்ந்து அந்த இடத்திலிருந்து மற்றெல்லாரையும் விட வேகமாகத் தப்பியோடினார்.

சுனாமி மீண்டும் உருவெடுக்காவிட்டாலும் அக்கரைப்பேட்டையின் மக்களுக்கு ஞானஒளி வழங்கத் திரும்பி வருவதற்கு ரவிசங்கர் 'ரிஸ்க்' எடுக்கவில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவமக்களுக்கு வாழும் கலையின் நுட்பங்களைப்பற்றி அறிவுவிளக்கமளிக்க குருஜி எப்போது வருவார் என்று சிஷ்யர்களைக் கேட்டபோது, அடுத்தநாள் குருஜி அமெரிக்காவிற்கு செல்வதாகவும், கடல் கொந்தளிப்பு அபாயம் பூரணமாக அடங்கிய பின்பு திரும்ப வருவார் என்றும் கூறினர்.

இந்திய மதுபானத்தொழிலின் பிரதான நட்சத்திரமான விஜய் மல்லய்யா தான் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சீடர்களில் ஒருவர் என்று பிரகடனப்படுத்திக்கொள்கிறார். "நான் எப்போதுமே பக்தி மிக்கவன்தான். ஆனால் ஸ்ரீ ஸ்ரீ என் பக்தியை நானே ரசிப்பதற்கு உதவியிருக்கிறார். பக்தியிலும் வியாபாரத்திலும் நான் 'நுரைபொங்க' வைப்பதற்கு அவர் உதவியிருக்கிறார்" என்கிறார் மல்லய்யா.

'நுரை பொங்குதல்' என்பது ஷாம்பெய்ன், பீர், சோடா இவற்றோடு சம்மந்தப்படுத்தி நம் மனதில் வரும் வார்த்தை. மல்லய்யாவைப் போன்ற மதுபானச்சக்கரவர்த்திக்கு அது ஒரு தினசரி வார்த்தை. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும்கலைக்குள் ஆழமாகச்சென்று பார்த்தால் திரு மல்லய்யா 'நுரைபொங்க வைப்பது' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியதன் ஆழத்தை அளவிடுவது சாத்தியப்படும். மது அருந்தாமலேயே போதையை உண்டாக்க முடியுமென்று மனோதத்துவ நிபுணர்கள் நிரூபித்திருக்கின்றனர். துடிப்பான தாளமும் இசையும் 'செக்ஸி' பேச்சுகளும் நம் உணர்வைத் தூண்டியெழுப்பும். உத்வேகமிக்க கோஷங்களால் மனித மனத்தை வெறிகொள்ள வைக்க முடியும். இத்தகைய கோஷ்டி மனக்கிளர்ச்சிக்கு உதாரணங்களாக கவர்ச்சிகரமான கோஷ்டி பிரார்த்தனைகளையும், பஜனைகளையும், உணர்ச்சியூட்டும் அரசியல் பிரச்சாரங்களையும் கூறலாம்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை இவற்றிலிருந்து பெரிதாக வேறுபட்டதல்ல. வித்தியாசம் என்று பார்த்தால் ஒன்றே ஒன்று இருக்கிறது. பிரார்த்தனைக் கூட்டங்களும், கோஷ்டி வழிபாடுகளும் சமுதாயத்தின் கடைநிலையிலிருக்கும் கண்மூடித்தனமான பக்தர்களை ஈர்க்கின்றன. ரவிசங்கர் சமுதாயத்தின் படித்த, செல்வந்த ஏமாளிகளுக்குத்தான் தன் வலையை வீசுகிறார்.

நவீனயுகத்தின் 'தீர்க்கதரிசி'யாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மதத்தையும் போலித்தத்துவத்ததையும் எப்படி விற்பனை செய்வது என்பதை நன்கு அறிந்திருக்கிறார். பேரின்ப நிலைதான் வாழ்க்கையின் லட்சியம் என்கிறார். 'மகிழ்ச்சியை அனுபவிப்பது எப்படி' என்று சாதிமத பேதமின்றி அனைவருக்கும் போதித்துக்கொண்டிருக்கிறார். 'வாழும் கலை' விளம்பரம் ஒன்றில் "ஸ்ரீ ஸ்ரீ விளையாட்டையும், சிரிப்பையும், ஞானத்தையும், தியானத்தையும், பாடலையும், நாட்டியத்தையும் பக்திக்குள் புகுத்தியிருப்பதாக" பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து "வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கவும் வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக்கவும், ஒவ்வொரு மனிதனுக்கும் நிரந்தரமாகப் புன்னகையொன்றை அளிக்கவும் ஸ்ரீ ஸ்ரீ அவரது வாழும் கலையை மனிதகுலத்திற்கு அர்ப்பணித்திருக்கிறார்" என்கிறது.

இன்பநிலையை அடைய எல்லோருக்குமே இச்சை இருக்கிறது. ஆனால் அதை அடைவதெப்படி? ரவிசங்கர் தனது விளம்பரங்களில் அறிவித்திருக்கும் வழிகளைப்பபார்க்கலாம். "நடைமுறை அற்புதமான 'வாழும் கலை' ஆறுநாட்களுக்கு அளிக்கும் 20-22 மணிநேரப்பயிற்சி. இது தினசரி பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு ஒரு கட்டடாயத் தேவை. சிறப்பு மூச்சுப்பயிற்சிகள், எளிதான யோகாசனம், தியானம், அறியாமையை அகற்றும் 'பிரக்ஞையின் நட்சத்திரக்கதிர்கள்' (என்னது இது?) மற்றும் அதிமுக்கியமான 'சுதர்ஸனக்கிரியா' - இவையனைத்தும் பயிற்சித்திட்டத்தில் உண்டு. தூய்மையான மனச்சான்றிற்கு செவிசாய்க்கக் கற்றுக்கொண்டால் நோய்கள் விலகி ஆரோக்கியத்தை முழுமையாக அனுபவிக்கமுடியும்!". ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 'வாழும் கலை' சமுதாயத்தின் 'rich and beautiful' மேட்டுக்குடிகளைத்ததான் இலக்காகக் கொண்டிருக்கிறது என்பதை இவ்விளம்பரம் தெளிவாக உணர்த்துகிறது.

உடற்பயிற்சி என்ற அளவைத்தாண்டி யோகாசனத்தில் ஆன்மீகக்ககூறு ஏதும் கிடையாது. தியானம், ரவிசங்கரின் இன்னொரு மருந்துச்சீட்டு. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியானம் என்பது கற்பனை தெய்வங்களை "ஜெய் ஜெய் பவானிமா, அம்பே பவானிமா" என்றும் "ஹரே சிவசிவ, ஹரே சுந்தரனானா" என்றும் பஜனை செய்வது தான். சிரச்சேதம் செய்யப்பட்ட தலையிலிருந்து ரத்தம் சொட்டச்சொட்ட ஒரு தெய்வம் அதைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் நினைத்து தியானம் செய்தால் மனதில் பயங்கரமான நினைப்புகள் தானே வரும்? கழுத்தில் பாம்பு சுற்றிக்கொண்டு கையில் சூலாயுதத்தை வைத்துக்கொண்டிருக்கும் தெய்வமும் எவ்விதமான பேரின்பநிலைய¨யும் தூண்டப்போவதில்லலை. சிலுவையில் அறயைப்பட்டு ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் தெய்வத்திற்கு முன்னால் தியானம் செய்ய உட்கார்நதால் எவன் ஒருவனுக்கும் தன்னம்பிக்கை தான் குலைந்துவிடும்.

ஸ்ரீ ஸ்ரீ யின் விளம்பரத்தில் கூறப்படும் இன்னொரு வாசகம், ரவிசங்கரின் முயற்சிகள் அறியாமையை அகற்றுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்பது! ஆனால் மூடநம்பிக்கைகளை பரப்பி மனிதர்களின் பலவீனத்தை தனக்கு ஆதாயமாக்கிக் கொள்பவர்களில் முதலிடத்தில் இவர் இருப்பதாகத்தான் பல பத்திரிகை செய்திகளிலிருந்து தெரியவருகிறது. குருட்டு நம்பிக்கையை இந்த 'சிரிப்பு குழு' எப்படி பரப்புகிறார் என்பதற்கு அந்த ஆசிரமத்தைப் பற்றி Asian Age பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை, மாதிரிக்கு கீழே:

'ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பெங்களூர் நகரில், 30 ஏக்கர் பரப்பில் தனது ஆசிரமத்தை வைத்திருக்கிறார். குரு தனது 'சத்சங்கங்களை' இங்கே நிலாராத்திரிகளில் நடத்துகிறார். இந்த ஆசிரமத்திற்க்கு அடியிலிருக்கும் கண்ணுக்குத்தெரியாத ஒரு ஏரியின் கரையில் ஒரு பழங்கால சிவன் கோயில் இருக்கிறதாம். வேதகால ரிஷியான வசிஷ்டர் இங்கே வசித்திருந்ததாக ஆசிரமக் குறிப்புகள் கூறுகின்றன'.

வேதகால ரிஷிகள் எவரும் விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்ததாகத் தெரியவில்லை. வேதநூல்கள் தெளிவாகக் குறிப்பிடுவது, விந்தியத்திற்கு வடக்கிலும் யமுனைக்கு மேற்கிலும் உள்ள பிரதேசத்தில்தான் வேதங்கள் உருவாகின என்பது. இருந்தும் ரவிசங்கர் தனது ஆசிரமத்தின் தெய்வீக தன்மையை நிலைநாட்டுவதற்காக வசிஷ்டரை ஒரு பெங்களூர்காரராக மாற்றிவிட்டிருக்கிறார்.

ஐம்பது வயதிற்கு மேலாகும் ரவிசங்கர் தனது தெய்வீகத் தன்மையை பறைசாற்றுவதற்கு பலவிதமான தொன்மங்களைப் பரப்பி வருகிறார். ரவிசங்கர் பாபநாசத்தில் உள்ள ஒரு பிராமணக் குடும்பத்தில் வெங்கிடரத்தினம், விசாலாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர். அவர் 1956ம் வருடம் மே 13ம் தேதி பிறந்ததாகக் குறிப்பிடப்படுவது உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேதியையொட்டி பின்னப் பட்டிருக்கும் ஒரு பழங்கதைதான் நகைப்பிற்குரியது. ஆதிசங்கரர் கூட மே மாதம் 13ம் தேதிதான் பிறந்ததாக ஆசிரம விளம்பரங்கள் அறிவிக்கின்றன. இந்தத் தகவலை ரவிசங்கர் எந்த ஆதாரத்திலிருந்து பெற்றார் என்பதை யாருக்கும் தெளிவுபடுத்த அவர் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆதிசங்கரர் 8ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 9ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்திருக்கக் கூடுமென்று அனுமானிக்கப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் பிறந்த அதே மாதத்தில் அதே தேதியில் ரவிசங்கரும் பிறந்தார் என்று கூறுவது சுத்தமான பித்தலாட்டம். ஆதிசங்கரருக்கு பிறந்தநாள் எதுவென்பது இதுவரை நிரூபணமாகவில்லை.

ஆனால் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அதோடு நிறுத்தவில்லை. இவரது அடுத்த பிரதாபம், ராமானுஜ ஜெயந்தியன்று இவருக்கு நாமகரணம் சூட்டப்பட்டது என்பது. ஆதிசங்கர் காலத்திற்கு 300 வருடங்கள் கழித்து வந்தவர் ராமானுஜர். வைணவ அறிஞரான இவர் விசிஷ்டாத்வைத தத்துவத்தை உண்டாக்கியவர். 'மாயவாதத்'தை உள்ளடக்கிய அத்வைத தத்துவத்தைப் பரப்பியவர் ஆதிசங்கரர். சங்கரரின் மாயாவாதத்திற்கு மறுப்பாக பக்தி மார்க்கத்தை பரப்பியவர் ராமானுஜர். ஆதிசங்கரர் முன்வைத்த கடவுளின் 'நிர்குண' குணாம்சத்திற்கு எதிராக கடவுளின் 'ச-குண' குணாம்சத்தை நிறுவியவர் ராமானுஜர். ஆனால் இருவேறு முரண்பட்ட தத்ததுவங்களை முன்வைத்த இரண்டு ஆச்சாரியர்களோடு தன் பெயரை இணைத்துக்கொள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முனைகிறார்.

இந்த இரண்டு ஆச்சாரியர்களின் பெயரையும் வலிந்து இணைத்திருப்பது சைவ வைணவ பாகுபாடின்றி அனைவரையும் தன் customers ஆக்குவதர்க்குத் தான் என்பதில் சந்தேகமேயில்லை! ரவிசங்கர நாராயணன் என்பது அவரது பூர்வாசிரமப் பெயர்! அவருடைய சொந்தகிராமத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கோயில் இருந்ததால் அவருக்கு அப்பெயரை வைத்ததாகவும் கூறிக்கொள்கிறார்! அவர் பெயருக்கு முன்னால் இந்த இரண்டு ஸ்ரீ ஸ்ரீ க்கள் எங்கிருந்து வந்தன? ஒரு பத்திரிகையாளர் இந்தக் கேள்வியைக்கேட்ட போது ரவிசங்கர் இவ்வாறு பதிலளித்தார்:

"108 அல்லது 1008 ஸ்ரீக்களை சேர்த்துக்கொண்டால் பெயர் நீளமாகி விடுகிறதே!" இரண்டோடு நிறுத்திக்கொண்டதற்காக நம்மை சந்தோஷப்படச் சொல்கிறார்! நமக்கு ஸ்ரீ சங்கராச்சாரியார் ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், ஸ்ரீ மாதவாச்சாரியார், ஸ்ரீ நாராயணகுரு போன்றோரைத்தெரியும். இவர்களெல்லலாம் ஏராளமானவர்களால் வணங்கப்பட்டாலும் இவர்களின் பெயர்களுக்கு முன் 'ஸ்ரீ ஸ்ரீ' என்றோ அல்லது '1008 ஸ்ரீ' என்றோ சேர்த்து அழைப்பதில்லலை. இந்துக் கடவுளர்கள் ஸ்ரீ ராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் கூட ஒரே ஒரு ஸ்ரீயோடு திருப்தியடைய வேண்டியிருக்கிறது. ஆனால் '108 ஸ்ரீக்கள் வட இந்தியாவின் போலித் துறவிகளிடையே ஒரு வித கெளரவப் பட்டடமாக ஆகியிருக்கிறது. அந்தப் பொல்லாங்குக் கூட்டத்தின் ரோடுதான் ரவிசங்கரும் சேர விரும்புகிறார். இதை யாரும் அவருக்கு சூட்டவில்லலை, அவராகவே தனது புனித சுயத்திற்கு சேர்த்துக் கொண்ட பட்டம் இது. 'அவருக்கு நான்கு வயதாக இருக்கும்போதே பகவத்கீதையின் எல்லா சுலோகங்களையும் மனப்பபாடமாக ஒப்பிப்பார்' என்பது போன்ற மாயைகள் அவரைப்பற்றி பரப்பப்படுகின்றன. இதுபோன்ற கதைகள் எண்ணிக்கையிலும் அளவிலும் வளர்ந்துகொண்டேதான் இருக்கப்போகின்றன.

செயின்ட் ஜோசப் கல்லூரி, பெங்களூரில் பட்டப்படிப்பு முடித்த பிறகு ரவிசங்கர் ரிஷிகேசத்திற்குச் சென்று மகரிஷி மகேஷ்யோகியின் சீடராக ஆனார். Transcendant Meditation எனப்படும் தியானத்தின் குருவான மகேஷ்யோகி உலகின் பல பகுதிகளிலும் ஆசிரமங்கள் அமைத்திருந்தவர்.

சந்தேகத்திற்கிடமாக பல காரியங்களைச் செய்து அளவற்ற பணத்தையும் அதிகாரத்தையும் இந்த ஆசிரமங்கள் சேர்த்துவைத்துள்ளன. மகேஷ்யோகியின் இந்த தியானம் அதன் நிழலான விவகாரங்களுக்காக நம்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏராளமான விமரிசனங்களைச் சம்பாதித்தித்தது. அவரது சீடரும் பிரதினிதியுமாக ரவிசங்கர் தென் ஆப்பிரிக்காவிற்கும், பிற இடங்களுக்கும் சென்று Transcendant Meditation னின் வியாபார ரகசியங்களை கற்றுக்கொண்டார். சுதந்திரமாக கிளைவிடுவதற்கான சமயம் 1982ல் வந்தது, வேறொரு பெயரோடும், பாணியோடும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உபதேசங்கள், பல யோகாச்சாரியார்களும் ஆயுர்வேத வல்லுனர்களும் ஏற்கனவே வளர்த்து வந்திருந்த குருட்டு நம்பிக்கைகள் பலவற்றை உள்ளிணைத்துக் கொண்டிருப்பவை. யோகாச்சாரியர்கள் பிராணாயாமம் என்று கற்றுத் தந்து கொண்டிருந்ததற்கு வேறுசட்டை மாட்டி 'சுவாசப்பயிற்சி' என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் விற்பனை செய்யப்படுகிறது. பிராணாயாமத்தினால் எந்த வியாதியை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று கூறுகிறவர்கள் இருக்கின்றனர். ரவிசங்கர் அதே மரபில் தொடர்கிறார். நம் உடல்களில் 'உயிருள்ள விஷம்' இருப்பதாகவும் அதுதான் நோய்களை உண்டாக்குகிறத என்றும் சாதிக்கிறார். ரவிசங்கரின் கீழ் நீங்கள் பிராணாயாமத்தைக் கற்றுக் கொண்டால் இந்த விஷம் முறிந்து வியாதிகளிலிருந்து நீங்கள் விடுபட்டிவிடுவீர்கள்!

பிராணாயாமம், யோகா மற்றும் புராதன தாந்தரீக மதங்களின் கண்மூடி வழக்கங்களின் கலவை ஒன்றிற்கு 'வாழும் கலை' என்று நேர்த்தியாக பெயரிட்டுள்ளார். இந்த வாழும் கலையை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களான நடுத்தரவயது ஆண்களும் பெண்களும்தான். இதுவொன்றும் இலவசமல்ல. நன்றாகப்பருத்த விலை அட்டையோடு வருவதுதான் இதன் சிறப்பு.

இந்த பணக்காரர்களின் 'குரு' இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவராக காட்டிக்கொள்வதில்லை. எந்த மதத்தைச் சேர்ந்த செல்வந்தர்களாக இருந்தாலும், செலவழிக்க தயாராக இருக்கும் யாரும் அவரிடம் வந்து ஏமாந்துவிட்டுச்செல்லலாம். அவரும், பொருத்தமாக உருவப்படங்களில் காணப்படும் ஏசு கிருஸ்துவைப் போலவே ஒப்பனை செய்து கொண்டு பிரசன்னமாகிறார். பல்வேறுபட்ட இனங்களுக்கும் மதங்களுக்கும் உரிய வழமைகளுக்கும் பழக்கங்களுக்கும் ரவிசங்கர் தகுந்த மரியாதை கொடுக்கிறார். இது உலகமக்களில் எல்லா பணக்காரர்களையும் அவரது வரவேற்பறைக்குள் இலகுவாக நுழையவைக்கிறதுக்குத்தான்!. இருண்ணனை அல்லது கிருஸ்துவை அல்லது சிவனை அல்லது நிறைபேரறிவினை தெய்வமாகப்பார்க்கும் பல்வேறுபட்ட மனிதர்களும் தனது 'வாழும் கலை'யை இணக்கமானவொன்றாக உணரவைப்பதற்ககு ரவிசங்கர் எடுத்துக்கொள்ளும் சிரத்தை அலாதி!

எல்லாவிதமான நம்பிக்கைகளுக்கும் தனது வழிபாடுகளை செலுத்தி, தனது அதிகபட்ச ஆதாயத்திற்கு அவற்றை பயன்படுத்திக்கொண்டு வேதங்களையும் உபநிடதங்களையும் வேதாந்தத்தையுதம் அவற்றின் மகத்துவத்தையும் பற்றி மேலோட்டமாக உபன்யாசம் செய்கிறார். ஆனால் அவரது ஆர்வம், மறைநூல்களில் காணப்படாத கிருஷ்ணனின் 'ராஸலீலா' வில்தான்.
-----------------------------------
கிருஸ்துவர்களின் 'கடவுள் மீதமான பயத்தை அவர் ஏற்றுக் கொள்வதில்லலை. கடவுளை நேசிப்பதன் மூலம் பக்தியை செலுத்த போதிக்கிறார். முரண்பாடானவற்றைக்கூட இணக்கம் செய்யவைக்கிற அவரது திறமையைக்கண்டு நாம் ஆச்சிரயப்படலாம். அவர் கூறுகிறார்: "இந்திய தத்துவத்தில் தெய்வ நிந்தனை என்று ஒரு விஷயமே கிடையாது. ஒரு நாத்திகவாதி கூட ஒரு யோகியாக இருக்கலாம். எதையாவது நீங்கள் விமரிசிக்க வேண்டுமென்றால் அதனை முழுமையாக நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தீவிரவாதம் சரியல்ல. ஒஸாமா குர்ரானை மட்டுமே படித்திருக்கிறார். குர்ரான் இயற்றப்படுவதற்கு முன்பிருந்தே கடவுள் இருந்திருக்கிறார். ஒஸாமா வேதங்கள், உபநிடதங்கள், மற்ற மதங்களின் மறைநூல்கள் போன்றவற்றை படித்திருந்தால் இன்று அவர் இருப்பதைப்போல அவர் ஆகியிருக்கமாட்டார்."

தொன்மரபுகளையும் சடங்குகளையும் சார்ந்திருந்த பாரம்பரிய இந்துவிஸத்தின் சிதைவு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தத்துவ வியாபாரத்திற்கு அறுவடை நிலமாகிவிட்டது. உயர் மத்திய வர்க்கத்தினருக்கும் செல்வந்தர்களுக்கும் அவர்கள் வாழ்வின் ஏமாற்றங்களுக்கு நிவாரணக்களிம்பு ரவிசங்கர் வழங்குகிறார். ஆனால் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ சுவாசப்பயிற்சி முறை ஒன்றும், போலி தத்துவப் பொட்டலத்தில் மடித்துத்தரப்படும் சிரிக்கும் விதத்திற்கான அறிவுரையும்! இவை உக்கிரமாக மார்க்கெட் செய்யப்படுகின்றன. சுதர்ஸனக்கிரியாவும் வாழும்கலையும் காப்புரிமை (patent) பெற்றிருக்கின்றன. ரவிசங்கர் நிரூபித்திருப்பதைப்போல இதுதான் 'பணம் அள்ளி வாழும் கலை'!


2006ல் எழுதியது
நன்றி : சாஜி
தமிழில் : ஜீக்கே.

No comments:

Post a Comment